“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!


சூரியன் வெளிச்சங்களாகவும் சந்திரன் ஒளியாகவும் மாறிய விநோதம்!

ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும் சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்கு பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் இறைவன் இதைப் படைத்துள்ளான்.அறிகிற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

-குர்ஆன் 10:5


என்ன அழகிய ஒரு இறைவனின் வார்த்தை!. 'லியா அன்' என்ற அரபிச் சொல்லை அரபு இலக்கணத்தின் படி மொழி பெயர்த்தால் 'வெளிச்சம்' என்றும் பன்மையில் 'வெளிச்சங்கள்' என்றும் இரண்டையுமே ஒரே வார்த்தையில் அரபு அகராதி குறிப்பதை பார்க்கலாம். 

அரபு மொழியில் நல்ல பாண்டித்தியம் உள்ளவர்களிடம் நாம் இதைப்பற்றிய தெளிவை அடையலாம். இணையத்திலும் கூகுளில் தேடினால் ஒருமையும் பன்மையும் ஒரே வார்த்தையில் குறிப்பிடப்படுவதை நாம் அறிய முடியும். 

சூரியனின் சாதாரண வெந்நிற ஒளி மாறுபட்ட அதிர்வெண்களையும் மாறுபட்ட நிறங்களையும் கொண்ட ஒளிகளின் கலவை என நியூட்டன் தனது சோதனைகள் மூலம் நிரூபித்தார். அவர் சூரிய ஒளியை ஒரு முப்பட்டைக் கண்ணாடிக்குள் செலுத்தி ஒளிப் பிரிகையை செய்து காட்டினார். அவற்றை மாறுபட்ட நிறங்களை உடைய ஒளிக் கற்றைகளாக வெளிப்படுத்திக் காட்டினார். அதன் பிறகு அந்த மாறுபட்ட வர்ணங்களை உடைய ஒளிக் கற்றைகளை ஒன்று குவித்து வெண்ணிறமுள்ள ஒரே ஒளிக் கற்றையாக மீண்டும் மாற்றிக் காட்டினார். இந்த முப்பட்டைக் கண்ணாடியும் அதன் துணைக் கருவிகளும் இணைந்த கருவியையே நாம் 'நிறமாலை' (spectrascope) நோக்கி என்கிறோம்.

இங்கு சூரியன் பல ஒளிகளை உமிழ்ந்து ஒரு ஒளியாக நமது கண்ணுக்கு தெரிகிறது. சூரியனை நாம் சாதாரணமாக பார்த்தால் அதில் ஏழு வர்ணங்களை உள்ளடக்கிய ஒரே வெளிச்சத்தை நாம் காணக் கூடியதாக இருக்கிறது. அதாவது ஏழு வெளிச்சங்களை சுருக்கி நம் கண்ணுக்கு ஒரு வெளிச்சமாக தருகிறது. எனவே 'லியாஅன்' என்ற இந்த வார்த்தை பிரயோகம் ஒருமைக்கும் பொருந்தி வருகிறது. ஏழு வண்ணங்களின் கூட்டுக்கும் பொருந்தி வருகிறது.

குர்ஆனில் பயன்படுத்தப் பட்டிருக்கும் 'அஸ்ஸ்ம்ஸ லியாஅன்' என்ற அரபி வார்த்தையை அரபு மொழியும், ஒளிப்பிரிகையையும் நன்கு அறிந்த ஒருவர் ஆழ்ந்து சிந்தித்தாரானால் இது இறைவனின் வார்த்தைதான் என்பதில் எந்த சந்தேகமும் கொள்ள மாட்டார். ஏனெனில் 'நூர்' என்ற வார்த்தையும் 'லியாஅன்' என்ற வார்த்தையும் மேலோட்டமாக பார்க்கும் போது ஒரே பொருளையே தரும். சந்திரனுக்கு போட்ட 'நூர்' என்ற வார்த்தையை சூரியனுக்கு குர்ஆன் பயன்படுத்தியிருந்தால் பொருளே மாறி விடும். 

ஆனால் எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரியனுக்கு எந்த வார்த்தையை பயன் படுத்த வேண்டும். சந்திரனுக்கு எந்த வார்த்தையை பயன்படுத்த வேண்டும் என்று நிதானித்து வார்த்தைகள் கையாளப்பட்டிருக்கிறது. இயற்பியலை ஓரளவு அறிந்த எந்த மனிதரும் இந்த வார்த்தை பிரயோகத்தை பார்த்து ஆச்சரியப் படாமல் இருக்க முடியாது. எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி இப்படி ஒரு வார்த்தையை இந்த இடத்தில் பயன்படுத்தியிருக்க முடியுமா என்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.




இனி குர்ஆன் சந்திரனுக்கு 'நூர்' என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்தியது என்பதையும் பார்ப்போம். அதற்கு முன்பாக எதிரொளிப்பு என்பதற்கு விக்கி பீடியா தரும் விளக்கத்தையும் பார்ப்போம்.

எதிரொளிப்பு அல்லது ஒளித்தெறிப்பு (Reflection) என்பது ஒளிக்கதிரானது சென்று ஒரு பொருளில் பட்டு எதிர்வது ஆகும்.
நாம் கண்ணாடியில் பார்க்கும் பொழுது நம் முகம் நமக்கு எவ்வாறு தெரிகின்றது? இருட்டான ஓர் அறையிலே கண்ணாடியில் நம் முகம் தெரியுமா? ஏன் தெரியவில்லை? வெளிச்சமான ஓரிடத்தில் நாம் கண்ணாடி முன்னர் நின்றால், நம் முகத்தில் ஒளிக்கதிர்கள் பட்டு எதிருவுற்று பின்னர் அவ்வொளி அலைகள் சென்று கண்ணாடியில் பட்டு கண்ணாடியால் எதிர்வுற்று நம் கண்களில் வந்து சேர்வதால் நாமே நம் முகத்தைப் பார்க்க இயலுகின்றது. இப்படி கண்ணாடியிலும், பிற பொருள்களிலும் ஒளி பட்டு எதிர்வது (தெறிப்பது) ஒளியெதிர்வாகும்.

இனி 'நூர்' என்ற அரபி வார்த்தைக்கு அரபு அகராதியில் வரும் சில ஆங்கில வார்த்தைகளைப் பார்ப்போம்.
Illumination- ஒளியூட்டுதல்
Glow- ஒளிர்வு, பிரகாசம்
Gleam - பிரதிபலிக்கும் ஒளி
Flare – வெளிப்பாடு




சந்திரனின் ஒளியானது அதன் சொந்த ஒளியல்ல. சூரியனிடமிருந்து பெறப்பட்ட ஒளியையே பிரதிபலிக்கிறது. இங்கு நூர் என்ற வார்த்தைக்கு கிடைக்கும் அநேக விளக்கங்களும் பிரதிலிப்புக்கு கையாளப்படும் வார்த்தைகளாகவே உள்ளதை எண்ணி வியக்கிறோம். முந்தய காலங்களில் சந்திரன் தனது ஒளியையே பிரதிபலிப்பதாகத்தான் நம்பி வந்தோம். சூரியனின் ஒளியையே சந்திரன் பிரதிபலிக்கிறது என்ற உண்மை சமீப காலமாகத்தான் அறியப்பட்டது.

'அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான்: சூரியனை விளக்காக அமைத்தான்'
-குர்ஆன் 71;16


திருக்குர்ஆனில் சூரியனுக்கு பயன்படுத்தப்படும் அரபுச் சொல் ‘ஷம்ஸ்’ இதனை ‘ஸிராஜ்’ (ஒளிவிளக்கு) ‘வஹ்ஹாஜ்’ (பிரகாசிக்கும் விளக்கு) ‘தியா’ (ஒளிரும் மகிமை) என்றும் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. சூரியன் தனக்குள் எரிந்துகொண்டே இருப்பதால், அது கடுமையான உஷ்ணத்தையும் வெளிச்சத்தையும் உண்டு பண்ணிக்கொண்டே உள்ளது.

சந்திரனை குறிக்கும் அரபுச் சொல் ‘கமர்’ என்பதாகும். குர்ஆன் இந்த சந்திரனை ‘முனீர் என்றும் வர்ணிக்கிறது. ‘முனீர்’ என்றால் ஒளியை (நூர்) வழங்கும் கோளம் என்று பொருள். எந்த இடத்திலும் சந்திரனை குறித்திட ‘வஹ்ஹாஜ்’ ‘தியா’ ‘ஸிராஜ்’ ஆகிய சொற்கள் பயன்படுத்தப்படவே இல்லை. அதே போல் சூரியனை குறித்திட ‘நூர்’ அல்லது ‘முனீர்’ என்ற சொற்களும் பயன்படுத்தப்படவில்லை. இரண்டு கோள்களும் ஒளியை உமிழ்ந்தாலும் அதன் தன்மைகள் மாறுபடுவதால் அங்கு வார்த்தைகளும் மிக துல்லியமாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்படுகிறது. இந்த அறிவை எல்லாம் முகமது நபி தனது கற்பனையால் யூகித்து குர்ஆனை உருவாக்கியிருக்க முடியுமா என்பதை படிப்பவர்களின் சிந்தனைக்கே விட்டு விடுகின்றேன். மேலும் தற்போது நம் வசதிக்கேற்ப குர்ஆனில் மாற்றி விட்டோம் என்றும் சொல்ல முடியாது. ஏனெனில் முகமது நபியால் சரி பார்க்கப்பட்டு உஸ்மான் அவர்களால் பிரதி எடுக்கப்பட்ட குர்ஆனின் இரண்டு பிரதிகள் இன்றும் நம் கைவசம் உள்ளது. அதை வைத்து உறுதி செய்து கொள்ளலாம். 

இறைவனே அறிந்தவன்.

No comments:

Post a Comment