“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

மாதங்கள் பன்னிரண்டுதான்- குர்ஆனின் அறிவியல்!


'வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்'
-குர்ஆன் 9:36


இவ்வசனத்தில் (9:36) "வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் 12 மாதங்கள்' எனக் கூறப்படுகின்றது. மக்கள் வருடத்தை 12 மாதங்களாகக் கணக்கிடுகிறார்கள் எனக் கூறாமல், 12 மாதங்கள் தான் இருக்க வேண்டும் என்று ஒரு கோட்பாட்டை இவ்வசனம் சொல்கிறது.

வானம், பூமி படைக்கப்பட்டது முதல் எல்லாக் காலத்திலும் வருடத்திற்கு 12 மாதங்கள் என்று மக்கள் கணக்கிட்டுக் கொண்டிருக்கவில்லை. கி.பி. 1582ஆம் ஆண்டு கிரிகோரியன் என்ற கத்தோலிக்க போப், நாட்காட்டிகளை ஒருங்கிணைக்கும் வரை பலவிதமான கணக்குகளில் ஆண்டுகளைக் கணித்து வந்தனர். ஒரு காலகட்டத்தில், 304 நாட்களைக் கொண்ட 10 மாதங்களே ஒரு வருடமாக இருந்துள்ளது.இன்னொரு காலத்தில் 455 நாட்களைக் கொண்ட 15 மாதங்கள் ஒரு வருடமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

வருடம் என்பதற்கு எதை அளவுகோலாக வைப்பது என்ற தெளிவான அறிவு மனிதனுக்குத் துவக்கத்தில் இல்லாததே இதற்குக் காரணம். மாதம் என்றோ, வருடம் என்றோ தீர்மானிப்பதாக இருந்தால் தெளிவான ஒரு வரையறை அதற்கு வேண்டும். ஒருவர் நினைத்தால் 10 மாதங்களை ஒரு வருடம் என்பதும், மற்றொருவர் நினைத்தால் 15 மாதங்களை ஒரு வருடம் என்பதும், இன்னொருவர் 20 மாதங்களை ஒரு வருடம் என்பதும் எந்த வரையறையின் அடிப்படையிலும் கூறப்படுவதாக இருக்க முடியாது.

நாம் வாழ்கின்ற பூமி சூரியனைச் சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் கால அளவை வருடம் என்று கணக்கிட்டால் அது ஒரு வரையறைக்கு உட்பட்டதாக இருக்கும். மனிதன் 16ஆம் நூற்றாண்டில் கண்டுபிடித்த இந்த வரையறையை ஆறாம் நூற்றாண்டிலேயே திருக்குர்ஆன் கூறுகின்றது. வருடம் என்பது, அதாவது சூரியனைப் பூமி சுற்றும் கால அளவு என்பது 12 மாதங்கள் தான். இது சூரியனையும் பூமியையும் படைக்கும் பொழுதே என்னால் ஏற்படுத்தப்பட்ட முடிவு என்று இறைவன் கூறுவதைத் திருக்குர்ஆன் எடுத்துச் சொல்கிறது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாக அமைந்துள்ளது.

No comments:

Post a Comment