“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

சூரியனும் சந்திரனும் தத்தமது வானத்தில் நீந்திகொண்டிருக்கின்றன


'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

'இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் அவனே படைத்தான். ஒவ்வொன்றும் அதனதன் பாதையில் வானவெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் 21:33

இங்கு நீந்துதல் என்ற வார்த்தையைப் பார்த்து நாம் ஆச்சரியப் படுகிறோம். கோள்கள் அனைத்தும் அதனதன் பாதையில் சுற்றி வரும்போது அதற்கு பொருத்தமான வார்த்தையான 'நீந்துதல்' என்ற வார்த்தைப் பிரயோகத்தை படிப்பறிவில்லாத முகமது நபியால் சிந்திக்க முடியுமா? உலகம் தட்டையானது என்று நம்பிக் கொண்டிருந்த அந்த காலத்தை இங்கு நாம் நினைவு கூற வேண்டும். இன்றும் கூட நம்மில் பலர் பூமி உருண்டை என்பதையும் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது என்ற உண்மையையும் நம்பாதவர் இருக்கின்றனர்.

'அதனதன் பாதையில் நீந்துகின்றன' என்ற வார்த்தையையும் சிந்தியுங்கள். அதனதன் பாதையில் அந்த கோள்கள் செல்லாவிட்டால் ஒன்றோடொன்று மோதி இந்த பிரபஞ்சமே பெரும் அழிவை சந்திக்கும். அதற்குரிய பாதைகளை வகுத்தால்தான் இந்த குழப்பம் ஏற்பாடாது. அதையும் இங்கு குறிப்பிடுவதை எண்ணி ஆச்சரியப்படுகிறோம்.

ஓரளவு வானியல் அறிவு உள்ளவர்களுக்கு கூட சூரியனும் அதன் இடத்தை விட்டு நகர்கிறது என்ற செய்தி புதுமையாகவே இருக்கும். சூரியன் ஒரு இடத்தில் நிலையாக நிற்கிறது என்றும் அந்த சூரியனைச் சுற்றியே பூமி, செவ்வாய், சந்திரன் போன்ற கோள்களெல்லாம் அதனதன் பாதையில் சுற்றி வருகின்றன என்றும் நம்பி இருந்தோம். நாம் மட்டும் அல்ல... அறிவியல் அறிஞர்கள் கோபர் நிக்கஸ், கெப்ளர், கலிலியோ போன்ற மேதைகளெல்லாம் கூட சூரியன் நகர்வதில்லை என்ற கொள்கையையே கொண்டிருந்தனர்.

தொலை நோக்கியை கண்டுபிடித்த கலிலீயோ கூட சூரியன் நகர்வதில்லை என்ற நம்பிக்கையிலேயே இறந்தும் போனார். இரவும் பகலும் ஏற்படுவதற்கு சூரியனின் நகர்வு அவசியமில்லை என்பதனாலேயே பெரும்பாலான அறிஞர்கள் சூரியன் நகர்வதில்லை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்தனர்.

அறிஞர் ஹெர்ஷலின் கண்டுபிடிப்பு!

அறிஞர் ஹெர்ஷவின் கண்டுபிடிப்பைப் பற்றி அறிவியல் அறிஞர் டூயிக் பின்வருமாறு விளக்குகிறார்.

'ஏனைய நட்சத்திரங்களைப் போன்று சூரியனும் விண்ணில் நகர்கிறது. நட்சத்திரத் தொகுதி ஒன்றில் பிரகாசமான வேகா எனும் நட்சத்திரத்திற்கு உள்ள ஓர் இடத்தை வில்லியம் ஹெர்ஷல் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அங்குள்ள நட்சத்திரங்களில் அவைகளுக்கு இடையில் உள்ள தூரம் கூடிக் கொண்டே வருவதைக் கவனித்தார். அதே நேரத்தில் அந்த திசைக்கு நேர் எதிர் திசையில் இருந்த நட்சத்திரங்கள் ஒன்றோடொன்று நெருங்கி வந்து காட்சி அளிப்பதையும் கவனித்தார். 

இது உள்ளபடியே பூமி உட்பட கோள்கள் அனைத்தையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு சூரியன் நகர்வதனால் ஏற்படும் தோற்றமே இந்த நிகழ்ச்சிக்கு காரணமாகும் என அவர் விளங்கிக் கொண்டார்.

இதை தெளிவாக விளங்குவதற்கு ஹெர்ஷல் ஒரு உதாரணத்தையும் கொடுக்கிறார். ஒரு காட்டிற்குள் மரங்களெல்லாம் ஏறத்தாழ சம தூரத்தில் இருக்கும் ஒரு பிரதேசத்தில் நீங்கள் நடந்து செல்வதாக கற்பனை செய்வோம். அவ்வாறு நடந்து கொண்டிருக்கும் போது இடையிடையே நீங்கள் நடக்கும் திசைக்கு நேராகவும் அல்லது அதற்கு நேர் எதிர் திசையிலும் பார்வையைச் செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். அப்போது உங்களுக்கு முன்னால் இருக்கும் மரங்கள் ஒன்றுக்கொன்று விலகிச் செல்வதாகவும் உங்களுக்குப் பின்னால் உள்ள மரங்கள் ஒன்றுக்கொன்று நெருங்கி வருவதாகவும் உணர்வீர்கள். இந்த தோற்றம் முற்றிலும் உங்களுடைய சுய நகர்வின் காரணமேயாகும். இதே நிலை சூரியன் நகரும் போதும் ஏற்படுகிறது. சூரியன் எந்த திசையை நோக்கி நகர்கிறதோ அந்தத் திசையில் அடர்த்தியாகத் தெரிந்த நட்சந்திரங்கள் இடைவெளி விட்டுத் தெரிகிறது. இதே போல் இதற்கு எதிர் திசையில் நட்சத்திரங்கள் மேலும் அடர்த்தியாகத் தெரிவதும் சூரியனின் சுயமான நகர்வின் காரணமேயாகும்.
-அஸ்ட்ரானமி ஃபார் எவ்ரிமேன், பக்கம் 297-98

இந்த உண்மைகளை எல்லாம் கண்டுபிடிக்க எத்தனை ஆய்வுகள் எத்தனை அறிஞர்கள் இரவு பகல் பாடுபட வேண்டியிருக்கிறது. ஆனால் இவ்வளவு பெரிய ஆய்வுகளையும் மிகச் சாதாரணமாக சொல்லிச் செல்லும் குர்ஆனின் வார்த்தைகள் வெறும் மனிதனின் வார்த்தை என்று எண்ண முடியுமா?

No comments:

Post a Comment