“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

இறை வேதத்தில் மற்றுமொரு அதிசயம்- ஹாமான்!


குர்ஆன் மீது மாற்றார் வைக்கும் பல குற்றச்சாட்டுகளில் ஒன்று 'முகமது நபி குர்ஆனை பைபிள் தோராவிலிருந்து நகல் எடுத்து குர்ஆனாக தந்திருக்கிறார்' என்பது. இதற்கு அவர்கள் வைக்கும் வாதம் இறைத் தூதர்கள் மற்றும் அவர்கள் சம்பந்தமான வரலாறுகள் சில மூன்று வேதங்களிலும் ஒன்றாக வருவதை ஆதாரமாக காட்டுகின்றனர். பெயர்களும் இடங்களும் சில அத்தியாயங்களில் ஒத்து வந்தாலும் வரலாறுகளில் ஏகத்துக்கும் மாற்றம் இருக்கிறது. ஏசு நாதரின் இறப்பு, அவரின் போதனைகள், அதே போல் மோசே, ஆபிரஹாம் போன்ற இறைத் தூதர்களின் வரலாறுகளும் பல மாற்றங்களை குர்ஆனில் கொண்டுள்ளதை வசதியாக மறந்து விடுகின்றனர். 

'அப்பூமியில் பலவீனர்களாகக் கருதப்பட்டோர் மீது அருள் புரியவும், அவர்களைத் தலைவர்களாக்கவும், அப்பூமிக்கு உரிமையாளர்களாக ஆக்கவும், அப்பூமியில் அவர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்தவும், பிர்அவுன், ஹாமான், மற்றும் அவ்விருவரின் படையினரும் எதை அஞ்சினார்களோ அதை அவர்களுக்குக் காட்டவும் நாடினோம்'.

-குர்ஆன் 28:5,6 

'மூசாவை(மோசே) நமது சான்றுகளுடன், தெளிவான ஆற்றலுடனும் ஃபிர்அவுன், ஹாமான், காரூன் ஆகியோரிடம் அனுப்பினோம். 'பெரும் பொய்யரான சூன்யக்காரர்' என்று அவர்கள் கூறினர்.

-குர்ஆன் 40:23,24 

'பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை.' என்று ஃபிர்அவுன் கூறினான். 'ஹாமானே! எனக்காகக் களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு. அதன் மீது ஏறி மூசாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்' என்றான். 

-குர்ஆன் 28:38


இது போன்று பல இடங்களில் ஃபிர்அவுன் மற்றும் ஹாமானின் வரலாறுகள் குர்ஆனில் சொல்லப்படுகிறது. ஆச்சரியமாக இந்த ஹாமானைப் பற்றி பைபிளிலோ அல்லது தோராவிலோ எந்த தகவலும் காணப்படவில்லை. முன்பு சொல்லப்பட்டிருக்கலாம். பின்னால் வந்த மத குருமார்கள் அந்த வரலாறுகளை எல்லாம் அழித்திருக்கலாம். ஹாமான் என்ற அமைச்சரைப் பற்றி பைபிளில் வந்தாலும் அது எகிப்தை தொடர்பு படுத்தி வரவில்லை. பைபிளின் பழைய ஏற்பாட்டில் மூஸா காலத்து எகிப்திய வரலாற்றில் ஹாமான் என்ற பெயரே எங்கேயும் குறிப்பிடப்படவில்லை. ஹாமான் என்பவன் எகிப்து அரசன் பாரவோவின்(ஃபிர்அவுன்) அதிகாரி அல்லது ஊழியன் என்கிறது குர்ஆன். இறைத்தூதர் மோசே காலத்தவனாக இந்த ஹாமான் அறியப்படுகிறான். ஆனால் பைபிளில் எஸ்தர் 3:1 அதிகாரத்தின் படி ஹாமான் என்பவன் பெர்சிய அரசனின் மந்திரியாவார். இறைத் தூதர் மோசேவுக்குப் பிறகு 1000 வருடங்கள் கழித்து வருகிறது பெர்சிய அரசனின் வரலாறு.
இந்த கதையை தவறாக விளங்கித்தான் முகமது நபி குர்ஆனில் ஹாமானின் பாத்திரத்தை உருவாக்கினார் என்று விமரிசிப்பவர்கள் சொல்கின்றனர். மோசே காலத்தில் ஹாமான் என்ற ஒருவனே இல்லை என்ற வாதம்தான் வைக்கப்பட்டது.









பண்டைய எகிப்தியர்களின் எழுத்து முறையானது சித்திரங்களைக் கொண்டே அமைக்கப்பட்டிருந்தது. இந்த எழுத்துக்கள் அகழ்வாராய்ச்சியில் முன்பு கிடைத்தாலும் அதன் அர்த்தம் என்ன என்பதை ஆராய்ச்சியாளர்கள் விளங்காமலே இருந்தனர். ஏனெனில் இந்த மொழி மக்களின் உபயோகத்திலிருந்து தூரமாக்கப்பட்டு வேறொரு புது மொழி அந்த மக்கள் பேச ஆரம்பித்திருந்தனர். எனவே சித்திரங்கள் கொண்ட இந்த மொழியானது வழக்கொழிந்து ஏறக்குறைய செத்த மொழியாகவே ஆகி விட்டது. 



கிபி 394ல் இந்த மொழி பற்றிய சில குறிப்புகள் கிடைக்கின்றது. ஆனால் இதைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் இதே கால கட்டத்தில் எவருக்கும் இல்லாமல் இருந்தது. கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அதாவது 1799 ஆம் அண்டு 'ரொஸிட்டா ஸ்டோன்' “rosetta stone” என்ற இந்த எழுத்து முறைகளை புரிந்து கொள்ளக் கூடிய கல் வெட்டுகள் கிடைக்கிறது. இந்த கல் வெட்டுகளில் உள்ள விபரங்கள் மூன்று பாகங்களாக பிரித்து எழுதியுள்ளார்கள். Hieroglyphics (எகிப்திய சித்திர எழுத்து முறை), demotic ( சமயம் சார்ந்த மொழி), கிரேக்கம் என்ற மூன்று பகுதிகளாக செய்திகள் தொகுக்கப்பட்டிருந்தது. இதில் கிரேக்க மொழியின் உதவி கொண்டு மற்ற இரண்டு மொழிகளின் விபரங்களையும் ஆராய்ச்சியாளர்கள் சுலபத்தில் கண்டு கொண்டனர். இதன் மூலமே சித்திர எழுத்துக்களின் உண்மையான விளக்கம் வெளி உலகுக்கு தெரிய ஆரம்பித்தது. இதன் மொழி பெயர்ப்பை ஜீன் பிரான்ஸிஸ் அழகிய முறையில் மொழியாக்கம் செய்து உலகுக்கு அளித்தார். இவ்வாறாக வழக்கொழிந்த ஒரு மொழிக்கு புத்துயிர் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் பண்டைய எகிப்தின் கலை, பண்பாடு, மதம் பற்றிய புதிய தகவல்கள் நமக்கு கிடைக்கப் பெற்றன.




ஆச்சரியமாக அந்த கல்வெட்டுகளில் மன்னன் பாரோவுடைய வரலாறும் அவனுக்கு உதவியாக இருந்த ஹாமானின் வரலாறும் பொறிக்கப்பட்டுள்ளது. வியன்னாவில் உள்ள ஹோஸ் அருங்காட்சியகத்தில் இந்த கல்வெட்டுகள் இன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 




அதில் கிடைக்கும் மேலதிக விபரமாவது கற்களைக் கொண்டு பெரும் கட்டிடங்களை எழுப்பும் கூட்டத்தின் தலைவனின் பெயர் ஹாமான் என்று பொறிக்கப்பட்டுள்ளது. மன்னன் பாரோவுடைய ஆட்சியைப் பற்றியும் சில குறிப்புகள் கிடைக்கின்றன. கல் வெட்டு கூறும் இந்த கருத்து அப்படியே குர்ஆனோடு ஒத்துப் போவதை எண்ணி வியக்கிறோம். மன்னன் பிரவுன் சொன்ன அந்த மாளிகையை கட்ட உதவியவன் பெயர் ஹாமான் என்று குர்ஆன் கூறுகிறது.

'பிரமுகர்களே! என்னைத் தவிர உங்களுக்கு வேறு கடவுளை நான் அறியவில்லை.' என்று ஃபிர்அவுன் கூறினான். 'ஹாமானே! எனக்காகக் களிமண்ணைச் சுட்டு எனக்கொரு மாளிகையைக் கட்டு. அதன் மீது ஏறி மூசாவின் இறைவனைப் பார்க்க வேண்டும். அவர் பொய்யர் என்றே நான் நினைக்கிறேன்' என்றான். 

-குர்ஆன் 28:38


பாரோ மன்னன் ஹாமானிடம் நேர்த்தியான முறையில் கட்டிடம் கட்டுமாறு கட்டளையிடுகின்றான். நாம் கேட்பது இறைத் தூதர் மோசே காலத்தில் ஏறத்தாழ பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஹாமான் என்ற நபரைப் பற்றிய விபரம் குர்ஆனில் எவ்வாறு இடம் பெற்றது? பைபிளிலோ தோராவிலோ கட்டிடம் கட்டிய ஹாமானின் பெயர் இடம் பெறாத போது முகமது நபிக்கு இந்த வரலாறும் பெயரும் எவ்வாறு தெரிய வந்தது? கட்டிட வல்லுனனான ஹாமானின் பெயர் 200 வருடங்களுக்கு முன்புதான் ஆராய்ச்சியாளர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. முகமது நபி என்ற ஒரு தனி மனிதர் இந்த குர்ஆனை கற்பனையில் கொண்டு வந்திருக்க முடியாது என்பதற்கு இந்த வசனங்களும் ஒரு சான்று.

மனிதக் கரங்களால் திருத்தப்பட்ட பைபிளிலும், தோராவிலும் தவறிருக்கலாம். மனிதக்கரம் புகாத குர்ஆனில் அறிவியலுக்கோ வரலாறுகளுக்கோ எந்த முரணும் காண முடியாது என்பதற்கு இதுவும் ஒரு சான்று. அடுத்து எகிப்தியர்களின் பூர்வீக மொழி அரபியன்று. கலாசார மாற்றங்களினால் அவர்களின் பூர்வீக மொழி மறைந்து போய் இன்று அரபி பொது மொழியாக ஆக்கப்பட்டது.

'ஒரு மனிதர்தான் இவருக்குக் கற்றுக் கொடுக்கிறார்' என்று அவர்கள் கூறுவதை அறிவோம். யாருடன் இதை இணைக்கிறார்களோ அவரது மொழி வேற்று மொழியாகும். இதுவோ தெளிவான அரபு மொழி.

-குர்ஆன் 16:103

No comments:

Post a Comment