“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

எறும்புகளுக்கும் அறிவு உண்டு


"அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்தபோது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்திடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது." - 27:18


இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும், அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது.

அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? ஸுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல் இப்போதும் எறும்புகள் தப்பிக்க வேண்டியதுதானே என்று சிலர் விதண்டாவாதம் செய்வார்கள்.
அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் கூறுகிறதோ அதை எறும்புகள் இப்போதும் அறிந்து கொள்ளத்தான் செய்கின்றன.

ஸுலைமான் என்ற தனி மனிதர் வருவதை எறும்புகள் அறியவில்லை. ஸுலைமானும் அவரது படையினரும் வருவதைத் தான் அறிந்து கொண்டன.

பெரிய படைகள் படைகளுக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப் படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கண்டுபிடிப்பு இதுதான்
நியூயார்க்: பூகம்பம் ஏற்படப் போவதை, சிறிய உயிரினமான, எறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழக, உயிர் அறிவியல் துறை ஆய்வாளர், கேப்ரியல் பார்பெரிக், தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்காக, பிரத்யேக மென்பொருளில் உருவான, வீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
சாதாரண நாட்களில், பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள், இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கும். ஆனால், பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, இரவு நேரத்தில், புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்பு, சாதாரண நிலை ஏற்பட்டதும் திரும்பி விடுகின்றன.

பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாக, எறும்புகள் வெளியேறுகின்றன.
இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை அப்படியே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வதாக இருந்தால் அது படைத்த இறைவனால் தான் இயலும்.
ஒரு படை வருவதை பொதுவாக அறிந்து கொள்வது சரிதாஅன். ஸுலைமான் நபியையும், அவரது படைகளையும் எறும்புகள் எப்படி அறிய முடியும்? என்ற சந்தேகம் வரலாம்.
எறும்புகளால் மனிதர்களை அவர்களது பெயர்களுடன் அறிந்து கொள்ள முடியாது. வேறு எந்த உயிரினத்தினாலும் இதை அறிந்து கொள்ள இயலாது.
ஆனால் ஸுலைமான் நபியவர்களுக்கு மாபெரும் ஆட்சியை அல்லாஹ் வழங்கினான். ஷைத்தான்கள் அவருக்குக் கட்டுப்பட்டு நடந்தனர். பறவைகள் மற்றும் ஜீவராசிகளின் மொழிகள் அவருக்கு கற்றுக் கொடுக்கப்பட்டு இருந்தன. (பார்க்க 27:16)
ஹுத் ஹுத் பறவையுடன் ஸுலைமான் நபி அதன் மொழியில் பேசியுள்ளார். (பார்க்க 27:20)
அவரது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்த ஜீவராசிகளுடன் ஸுலைமான் நபி அவர்கள் அந்த ஜீவராசிகளின் மொழியில் பேசுவார். அப்படி பேசியதன் அடிப்படையில் எறும்புகளுக்கு தன்னைப் பற்றி ஸுலைமான் நபி தெரிவித்து இருந்தால் ஸுலைமான் நபியை அந்த எறும்புகள் அறிந்து கொண்டதில் வியப்பு இல்லை.
பெரும் படையுடன் ஒரு கூட்டம் வருவதை எறும்புகள் உணர்ந்தவுடன் இந்தப் பகுதியில் இப்படி ஒரு படை வருவதாக இருந்தால் அது ஸுலைமான் நபியின் படையாகத்தான் இருக்க முடியும் என்று எறும்புகள் அறிந்து கொண்டன.

No comments:

Post a Comment