“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

கெடாமல் பாதுகாக்கும் தொழில் நுட்பம்

ஒரு மனிதரின் வாழ்வில் நடந்த அற்புத நிகழ்ச்சியை குர்ஆனில் இந்த வசனம் (2:259) கூறி விட்டு, "உம்மை மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்' எனவும் குறிப்பிடுகின்றது.
மனிதர்களுக்கு அத்தாட்சியாக ஆக்கியுள்ளதாகக் கூறப்படும் வசனங்களில் முன்னறிவிப்போ, அறிவியல் உண்மைகளோ, அது பற்றிய குறிப்புகளோ புதைந்து கிடப்பதைத் திருக்குர்ஆனில் பரவலாகக் காணலாம்.
இந்த நிகழ்ச்சியில் சொல்லப்படும் மனிதர் தன்னுடன் ஒரு கழுதையையும், உண்பதற்கான சில உணவுகளையும், தண்ணீரையும் எடுத்துக் கொண்டு பயணம் செய்கிறார். இந்நிலையில் அவரை நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்த இறைவன், கழுதையையும் மரணிக்கச் செய்து மக்கிய எலும்புகளாக்கினான். ஆனால் அந்த மனிதர் கொண்டு வந்த உணவும் தண்ணீரும் நூறு ஆண்டுகள் கடந்த பின்பும் கெட்டுப் போகாமல் அப்படியே இருந்தது.
இதில் இறைவன் கூறும் அந்த அத்தாட்சி எது?
உணவும், தண்ணீரும் இருந்த இடத்திற்கு அருகில் தான் கழுதையின் உடலும் கிடந்தது. அப்படியிருந்தும் கழுதை மக்கிப் போகின்றது. அதே சமயம் உணவும் நீரும் கெட்டுப் போகாமல் இருக்கின்றது.
குளிர்பதனப் பெட்டியைப் போன்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பாதுகாப்புக் கவசத்தை ஏற்படுத்த முடியும் என்று இவ்வசனம் முன்னறிவிப்புச் செய்கின்றது.
பொருட்கள் கெட்டுப் போகாமல் பாதுகாப்பதற்கு ஒரு தொழில் நுட்பம் உள்ளது; அதை ஆய்வு செய்யுங்கள் என்ற கருத்து உள்ளடங்கி இருப்பதால் தான் "அத்தாட்சியாக ஆக்கியுள்ளோம்' என்று இறைவன் கூறுகின்றான்.

No comments:

Post a Comment