“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

குர்ஆன் கூறும் பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்!



'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8

திருக் குர்ஆனின் 13;8 வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கு என சில தனிப் பட்ட தன்மைகள் உண்டு. தனக்குள் அது அன்னியப் பொருள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது. நாம் சாப்பிடும் உணவுகளையும் ஜீரணித்துக் கொண்டு பிறகு கழிவாக வெளியேற்ற முயற்சிக்கிறது. நம் கண்களை எடுத்துக் கொள்வோம். கண்களில் ஏதேனும் தூசிகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே கண் முயற்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் உடலின் இயற்கை தன்மைக்கு மாற்றமாக கருவறை அன்னிய உடலின் விந்துத் துளியை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் தனக்குள் விந்துத் துளியை கருவாக வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை விரிகிறது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. 

இனி டாக்டர் அனுராதா கிருஷ்ணன் அளிக்கும் விளக்கத்தைப் பார்போம்:

பெண்ணின் இடுப்புப் பகுதியில் பாதுகாப்பாக இருக்கும் கருப்பையில், கருத் தரித்தபோது கருவானது ஒரு திராட்சை அளவில் சிறியதாக இருக்கும். அதுவே பிரசவிக்க இருக்கும்போது அது ஒரு பலாபழ அளவில் இருக்கும். ஆக, கருப்பையானது கிட்டதட்ட 100 மடங்கு விரிவடைகிறது. இப்படி விரிவடையும்போது அது பெண்ணின் வயிற்றில் உள்ள பெருங்குடல், சிறுகுடல் மற்றும் இரைப்பையை பின் தள்ளச் செய்யும். இதனால், கருப்பைக்கு அழுத்தம் உண்டாகும்.

பெண்ணின் கருப்பையின் சுவர் வலிமையாக இருந்தால் மட்டுமே குடல் மற்றும் இரைப்பையின் அழுத்தத்தை அது தாங்கும். கரு வளர வளர இந்த அழுத்தம் அதிகமாகும் ஆகையால் கருப்பையின் தாங்குதலும் வலுவுள்ளதாக இருக்க வேண்டும். .

பலமில்லாத கருப்பையைக் கொண்ட பெண்களுக்கு இந்த அழுத்தம் தாங்காமையால் கருக்கலைப்பும் (7 மாதற்கு முன்னர் நிகழ்வது) குறைப் பிரசவமும் (7 மாதம் முதல் 9 மாதத்திற்குள்) நிகழும். ஆக, கருப்பையின் வலிமையின்மையே கருக்கலைப்பு மற்றும் குறைப்பிரசவங்களுக்கு காரணமாக இருக்கிறது. கருப்பை வலுவாக இருக்க நம் மண்ணீரலின் சக்தி தரமாக இருக்க வேண்டும்.

-dr anuradha krishnan

மருத்துவரின் மேற்படி கூற்றில் உள்ள அறிக்கை படி சிறிதாக உள்ள கருவறை குழந்தையின் வளர்ச்சிக்கு தக்க விரிவடைகிறது என்பதை பார்தோம். இந்த தன்மையை ஒரு பெண்ணின் வயிற்றில் உண்டாக்கியவன் யார்? வயிற்றில் பல பகுதிகள் இருந்தும் குறிப்பிட்ட இந்த பகுதி மட்டும் விரிவடையக் காரணம் என்ன? நம்மை படைத்த இறைவன் இத்தகைய ஏற்பாட்டை பெண்களின் வயிற்றில் உருவாக்காமல் இருந்தால் மனித இனம் பல்கிப் பெருக முடியுமா? அல்லது நாத்திகர்கள் சொல்வது போல் இவை எல்லாம தானாகவே உருவாக்கிக் கொண்டதா?

ஒரு பெண்ணின் கருவறை சுருங்கி கிடப்பதையும் அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சிக்குத் தக்க விரிவடைவதையும் நான் அறிவேன் என்கிறான் இறைவன். அந்த விரிவடைதல் எந்த அளவு இருக்க வேண்டும் என்பதையும் தானே நிர்மாணித்துள்ளதாகவும் இறைவன் கூறுகிறான். ஒன்பது மாதத்துக்கு மேல் கருவறை விரிவடைய ஆரம்பித்தால் அந்த பெண்ணின் வயிறு வெடித்து விடும் அபாயம் உண்டு. எனவே அதற்கு மேல் விரிவாக்கம் செல்லாமல் குழந்தையை வெளியேற்றும் ஒரு உந்துதலை அந்த வயிற்றில் ஏற்படுத்தியவன் யார்? அதற்கான கால நிர்ணயத்தையும் தானே உண்டாக்கியதாக இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். 1400 வருடங்களுக்கு முன்பு இறக்கப்பட்ட ஒரு வசனத்தை நாம் படித்துக் கொண்டிருக்கிறோம். 

'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8 

source from :Suvanappiriyan

No comments:

Post a Comment