“ஒவ்வொரு தூதர்களும் அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர்; எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன்” – நபிகள் நாயகம் (ஸல்)
அகில உலகத்தை படைத்து பரிபாலிக்கும் அந்த ஓரிறைவன் பல்வேறு கால கட்டங்களில் மக்கள் சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக பல்வேறு தூதர்களை நபியாக அனுப்பி, மக்களை ஓரிறையின் பால் அழைக்கிறான். அவர்களும், அழைப்புப் பணி மூலமும், அல்லாஹ்வின் அனுமதியோடு பல அற்புதங்களை நிகழ்த்தியும் மக்களை நல்வழிப்படுத்தியுள்ளார்கள். அந்த வரிசையில், முஹம்மது (ஸல்) அவர்களை அல்லாஹ், இந்த மனித சமுதாயத்திற்கே இறுதித் தூதராக 1400 ஆண்டுகளுக்கு முன் அனுப்புகின்றான். அந்த கண்ணியமிகு தூதர் தான், தனக்கு வழங்கப்பட்ட அற்புதமாக அல்குர்ஆனை கூறுகின்றார்கள்.
சத்திய வேதமாம் திருக்குர்ஆன் இறைவனிடமிருந்து அருளப்பட்டது தான் என்பதில் முஸ்லிம்களிடையே எந்த வித ஐயமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால், முஸ்லிமல்லாத மக்களுள் பலரிடையே திருக்குர்ஆன் முஹம்மது (ஸல்) அவர்களால் இயற்றப்பட்டது என்ற எண்ணம் இருந்து வருகின்றது. நபிகள் நாயகத்தின் பேச்சுக்களில் ஒரு வரி கூட திருக்குர்ஆனில் இடம் பெறவில்லை என திருக்குர்ஆனே பல இடங்களில் நமக்கு சான்று பகர்கின்றது.
“இந்தக் குர்ஆன், அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப்பட்டதாக இல்லை; மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப்படுத்துவதாகவும், தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது; இதில் எந்த ஐயமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது. (அல்குர்ஆன் 10:37)”

அபாய உலகில் ஓர் அபய பூமி

இன்று உலகெங்கிலும் கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், கற்பழிப்புக்கள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றன.
 
அத்துடன் உலக நாடுகள் புரட்சிகளையும் போராட்டங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக, டிசம்பர் 2010ல் துனிசியாவில் ஒரு முஸ்லிம் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது அந்நாட்டில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்தது.
அந்தப் புரட்சி அக்கம்பக்கத்து நாடுகளான எகிப்து, சிரியா, யமன், லிபியா என்று பற்றிக் கொண்டது. அந்தக் கொடிய, கோரத் தீயில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சி இரையானது. லிபியாவில் கதாபியையும் அவரது ஆட்சியையும் பலியாக்கியது. இப்போது சிரியாவும் சீக்கிரத்தில் பலியாக உள்ளது. ஏற்கனவே இராக் எரிந்து கொண்டிருக்கின்றது. பஹ்ரைனும் இதன் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றது.
 
சுற்றியும் சூழவும் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. ஆனால் மக்கா நகரம் மட்டும் அமைதி, அபய நகரமாகத் திகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஏன்? இதற்கு அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.
 
இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?
அல்குர்ஆன் 29:67
 
இந்த அற்புத உண்மையை உற்று நோக்குமாறு உலக மக்களை அல்குர்ஆன் கூறுகின்றது. இதன் மூலம் தன்னை ஓர் இறைவேதம் என்றும் தன்னையே வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொள்ளுமாறும் மக்களுக்கு இந்தக் குர்ஆன் அறிவுறுத்துகின்றது.
 
தனது அழைப்பின் பேரில் ஆண்டுதோறும் பல மில்லியன் கணக்கில் மக்கள் கூடுகின்ற ஹஜ் என்ற மாநாட்டையும், அந்த மாநாடு நடைபெறும் ஆலயத்தையும், அந்த ஆலயம் அமைந்துள்ள மக்கா நகரையும் உற்று நோக்குமாறு திருக்குர்ஆன் கூறுகின்றது.
 
முஸ்லிம்களானாலும் சரி! முஸ்லிமல்லாதவர்களானாலும் சரி! இந்தத் திருக்குர்ஆன் வழி நடந்தால் அவர்களுக்கு மத்தியில் பிரச்சனைகள் இல்லை என்ற பாடத்தைப் போதிக்கின்றது. வெள்ளையர்கள், கறுப்பர்கள் அனைவரையும் அரஃபா எனும் ஒரு வெட்டவெளியில் ஒன்று திரட்டி, மனித குலத்திற்கு இடையே இன, மொழி, நிற, நாடு பாகுபாடுகள், வேறுபாடுகள் இல்லை என்ற உண்மையை ஹஜ் எனும் இந்த மாநாடு உணர்த்துகின்றது. தீண்டாமைக்குத் தீர்வு இஸ்லாம் தான் என்பதையும் ஐயத்திற்கு இடமின்றி இந்த மாநாடு தெரிவிக்கின்றது.
கர்நாடகாவில் வாழும் கன்னடனே! உன் அண்டை மாநிலத்தவன் - தமிழ்நாட்டுக்காரன் வேறு யாருமல்ல! ஆதம் என்ற ஒரே தந்தைக்குப் பிறந்த உன் உடன்பிறந்த சகோதரன் தான். அவன் தமிழ் மொழி பேசுவதால் தண்ணீர் கொடுக்க மறுக்காதே என்ற பந்த பாசத்தை ஊட்டி வேற்றுமை உணர்வை வேரறுக்கச் செய்கின்றது இந்த மாநாடு!
 
இந்தியாவில் 626 மில்லியன் மக்கள் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிக்கின்றனர். இது மிகப்பெரிய சுகாதாரக் கேடாகும். இதனால் தான் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், ஒரு ஊரில் கோயில் இருப்பதை விட கழிப்பறை இருப்பது மிக மிக அவசியம் என்று குறிப்பிடுகின்றார்.
 
கழிவறை இல்லாத வீட்டு மாப்பிள்ளையை கைப்பிடிக்காதீர், கல்யாணம் முடிக்காதீர் என்றும் அவர் மணப்பெண்களுக்கு அறிவுரை கூறியுள்ளார். இது இந்தியாவில் சுகாதார நிலையின் அவலத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.
 
இந்த ஆண்டு உலகெங்கிலும் இருந்து சுமார் 37 லட்சம் முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்காவில் கூடியுள்ளனர். ஆனால் ஒரு நபர் கூட திறந்த வெளியில், மக்களின் நடைபாதையில் மலம் கழிப்பதைக் காண முடியாது.
 
இந்தியாவில் கோயில் மற்றும் தர்ஹாக்களின் சுவர்களைச் சுற்றி மக்கள் மலம் கழித்து அசுத்தப்படுத்துவதைப் பார்க்க முடிகின்றது. ஆனால் இந்த நிலை மக்காவில் இல்லையே! ஏன்?
 
உலக மக்களை இந்தச் சுகாதார விஷயத்திலும் சுண்டியிழுக்கின்ற வகையில் ஹஜ் மாநாடு அமைந்திருக்கின்றது. இப்படிப் பல்வேறு பயன்பாட்டுப் பரிமாணங்களைக் கொண்டிருப்பதால் தான் ஹஜ் பற்றி வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்.
 
"மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்'' (என்றும் கூறினோம்.) அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.)
அல்குர்ஆன் 22:27,28
 
உலக மக்களுக்கு சமத்துவம், சகோதரத்துவம், பாதுகாப்பு, சுகாதாரம் என்பன மட்டுமில்லாமல் மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுவதால் அகிலத்தின் வழிகாட்டி என்று மிகப் பொருத்தமாகவே அல்லாஹ் கூறியுள்ளான்.
 
அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்.
அல்குர்ஆன் 3:96, 97
 
இதன் மூலம் திருக்குர்ஆன் உலகிற்கு உரக்கச் சொல்லும் உண்மை இதுதான்:
உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!
அல்குர்ஆன் 7:3

No comments:

Post a Comment